தமிழறிஞர்கள், மரபுரிமையாளர்களுக்கு ஆயுட்கால உதவித் தொகை-தமிழக அரசு உத்தரவு
மதுரை: தமிழறிஞர்கள் மற்றும் தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்கள் உள்பட 249 பேருக்கு ஆயுட்கால உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக உயர் நிலைக் குழுக் கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் எல்லைக்காவலர்கள் 23 பேர், எல்லைக்காவலர்களின் மரபுரிமையாளர்கள் 15 பேர், தமிழறிஞர்கள் 64 பேர், தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்கள் 147 பேர் என மொத்தம் 249 பேருக்கு உதவித் தொகை வழங்கக் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
எல்லைக் காவலர்களுக்கு ரூ 4,000, எல்லைக் காவலர்களின் மரபுரிமையாளர்களுக்கு ரூ 2,000, தமிழறிஞர்களுக்கு ரூ 3,000, தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்கு ரூ 1,500 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் இத்தொகை வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்த திட்டத்தின் கீழ் எல்லைக் காவலர்கள் 334 பேர், எல்லைக் காவலர்களின் மரபுரிமையாளர்கள் 166 பேர், தமிழறிஞர்கள் 999 பேர், தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்கள் 528 பேர் என மொத்தம் 2027 பேர் பயனடைந்து வருகின்றனர்.
இனி வரும் காலத்தில் 249 பேர்களையும் சேர்த்து மொத்தம் 2,276 பேர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.