இறைச்சிக்காக மான், மிளா, மான்வேட்டை, விவசாயிக்கு போலீஸ் வலை வீச்சு
சிவகிரி: சிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மான், மிளா கேளை ஆடுகள் வேட்டையாடி தலைமறைவான விவசாயியை அதிரடி படையினர் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட விவசாயியின் தோட்டத்தில் இருந்து தோட்டாக்கள், வெடிமருந்துகள் மான், மிளா, எலும்பு கூடுகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதாக மாவட்ட வனஅலுவலர் அம்புரோஸ், ராஜபாளையம் அதிரடிப்படை போலீஸ் முகாம் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை சிவகிரி வனசரகர் சாலமன் ராஜன் தலைமையில் வனகாப்பாளர்கள் பன்னீர்செல்வம், செல்லையா, திருமலைசாமி, காவலர்கள் பிச்சை, பாலன், சந்திரசேகர், கணேசன், மற்றும் ராஜபாளையம் அதிரடிபடை போலீஸ் முகாமை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை, 5 அதிரடிபடை வீரர்கள் கோம்பையாறு பகுதியை ஓட்டி அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சிவகிரி மேலரத வீதியை சேர்ந்த விவசாயி செல்வம், என்பவரது தோட்டத்தில் தோட்டாக்கள், மற்றும் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்குள்ள ஒரு அறையை சோதனை செய்ததில் வெடிக்காத நிலையில் 25 தோட்டாக்கள், மின் வயர் ரோல், கட்டு கம்பிகள், 3 அரிவாள்கள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த மான், மிளா, கேளை ஆடு எலும்பு கூடுகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இறைச்சி மற்றும் தோலுக்காக ஏராளமான வனவிலங்குள் சுட்டு கொல்லப்பட்து விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக கள்ள துப்பாக்கியுடன் தலைமறைவான விவசாயி செல்வம் மற்றும் போலீஸ்காரர் ஒருவரின் மகனையும் அதிரடிப்படை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications