காளஹஸ்தி கோவிலுக்கு ரூ.30 கோடியில் புதிய ராஜகோபுரம்: முதல்வர் ரோசய்யா அடிக்கல் நாட்டினார்
காளஹஸ்தி: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் ராஜகோபுரத்தைக் கட்டுவதற்கான அடிக்கல்லை ஆந்திர முதல்வர் ரோசய்யா நாட்டினார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவிலின் ராஜகோபுரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. எனவே, புதிய ராஜகோபுரம் ஒன்றை கட்ட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து ரூ.30 கோடி செலவில் புதிய ராஜகோபுரம் கட்ட தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டது. நேற்று காலை அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள ஆந்திர முதல்வர் ரோசய்யா நேற்று காலை 6.30 மணிக்கு காளஹஸ்திக்கு வந்தார். அவருக்கு தேவஸ்தான வாசலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரோசய்யாவுக்கு தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, சாமி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பிறகு காலை 7.25 மணிக்கு புதிய ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் பெயர் பலகையை ரோசய்யா திறந்து வைத்தார். இன்னும் 2 ஆண்டுகளில் ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடையும் என்று அவர் கூறினார்.
அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர மந்திரிகள் தர்மன பிரசாத் ராவ், பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, காதே வெங்கட் ரெட்டி, காளஹஸ்தி எம்.எல்.ஏ. கோபாலகிருஷ்ணா, திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஆதிகேசவலு நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications