ரியாத்தில் வசெந்தம் சார்பில் மறைமலையடிகள் பிறந்தநாள் கொண்டாட்டம்
மாலை 5 மணிக்கு மோர் வழங்குதலுடன் தொடங்கப்பட்ட விழாவில் தனியர்களுக்காக (Bachelors) கில்லி, கோலிகுண்டு, நொண்டி, கோக்கோ போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இளம் வயதினர் மட்டுமல்லாது பெரியவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பின்பு திருமதி. தில்லைக்கரசி சிவகுமார் மறைமலையடிகள் பற்றிய சில குறிப்புகளை தொகுத்து வழங்கினார். அதனை அடுத்து புலவர் அரங்கராசன் அவர்களின் சிறப்புரையும், திரு நாக.இளங்கோவன் அவர்களின் செம்மொழி மாநாட்டுத் தூய்ப்பும் (அனுபவம்) நடைபெற்றது. தொடர்ந்து நகைச்சுவை நாடகம், தமிழிசைப் பாடல் ஆகியவை நடைபெற்றது. பின்னர், திருமதி. ரம்யா காமராஜ் அவர்கள் வசெந்தம் கடந்து வந்த பாதை குறித்த ஒரு மீள்பார்வையை வெளியிட்டார்.
வசெந்தத்தின் ஒவ்வொரு விழாவிலும் சமுதாயத்திற்கு உதவும் செயல்களைச் செய்வது வழக்கம். இம்முறை கண் தானம் செய்வது குறித்து விளக்கப்பட்டது. பல உறுப்பினர்களும் கண் தானம் செய்ய முன்வந்தது சிறப்பம்சமாகும். விழாவின் இறுதியில் சவுதி வாழ் மூத்தத் தமிழரும் சமூக சேவகருமான திரு. ஜெயசீலன் அவர்களுக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications