தீ விபத்தை தடுக்க அதி நவீன அவசர மீட்பு ஊர்தி அறிமுகம்
கோவை: தமிழகத்தில் தீ விபத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற நவீன கருவிகள் கொண்ட 15 அவசர மீட்பு ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி டி.ஜி.பி. நடராஜ் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் டேங்கர் இல்லாமல், முற்றிலும் நவீன மீட்பு கருவிகள் மட்டுமே கொண்ட, "அவசர மீட்பு ஊர்தி' எனும் தீயணைப்பு வாகனத்தை கோவையில் நடராஜ் அறிமுகப்படுத்தினார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக தீயணைப்புத்துறையில் அவசர மீட்பு ஊர்திகள், பொள்ளாச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணி மனையில் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. இதில், மூன்று வாகனங்கள் கோவை வந்துள்ளன. இவற்றில் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்படும்.
இந்த வாகனத்தில் தண்ணீர் டேங்க் இல்லை. அதற்கு பதிலாக தீ விபத்து, கட்டட இடிபாடுகள், வாகன விபத்துகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க தேவையான ஹைட்ராலிக் கட்டர், 22 டன் எடையுள்ள வாகனங்களை மேலே தூக்கும் ஏர்பேக், கான்க்ரீட் சுவர், இரும்பு கம்பி மற்றும் பெரிய மரங்களை வெட்டும் கருவிகள் என 105 உபகரணங்கள் இதில் உள்ளது.
இந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. 15 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இது போல் மேலும் 15 வாகனங்கள் வாங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தவிர, தண்ணீர் டேங்கருடன் கூடிய 65 தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் 60 வாகனங்கள் தயாரிப்பில் உள்ளன.
தமிழகம் முழுவதும் தற்போது 600 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. இதில், தீயணைப்பு நிலையங்களில் உள்ள பழைய வாகனங்கள் அனைத்தும் மாற்றப்படும்
புதிதாக சென்னை தி.நகர், ஆத்தூர், மொடக்குறிச்சி, கெங்கவல்லி, ராயகோட்டை, ஆசனூர், முத்தாண்டிக்குப்பம் ஆகிய ஏழு இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
மீட்பு பணி மையம் கோத்தகிரியில் அமைக்கப்படும். இந்த மையத்துக்கு தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படும். மேலும், மோப்ப நாய் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications