திருப்பதி கோவில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.1.69 கோடி: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் 15 மணி நேரம் காத்திருந்து தான் சாமியை தரிசிக்க வேண்டியுள்ளது.
புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியா முழுவதும் இருந்து சாமியை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் பிள்ளை குட்டிகளுடன் தமிழக மக்கள் திரளாக வருகின்றனர்.
இதனால் கடந்த 2 வார காலமாக கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். திருப்பதியில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் நிரம்பிவிட்டன. இதையடுத்து மக்கள் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் தூங்குகின்றனர்.
மேலும், பக்தர்களை வைகுண்டம் 2-வது கியு காம்ப்ளக்சில் தங்க வைத்து இலவச தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனினும், கூட்ட மிகுதியால் சுமார் 3 கி. மீ. தூரத்திற்கு வரிசை நிற்கிறது. இதனால் குறைந்தது 15 மணி நேரம் காத்திருந்தால் தான் சாமியை இலவசமாக தரிசிக்க முடிகிறது. சீக்கிரம் தரிசனம் செய்பவர்கள் குறைந்தது 3 மணி நேரமாவது காத்திருக்க வேண்டியுள்ளது.
தரிசனம் இப்படியென்று இலவசமாக முடி செலுத்தச் செல்வோர் 3 மணி நேரம் காத்திருந்தால் தான் முடி காணிக்கை அளிக்க முடிகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்து.
கூட்டத்திற்கு ஏற்றவாறு உண்டியலும் வேகமாக நிரம்புகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 69 லட்சத்தை தொட்டது.












Click it and Unblock the Notifications