துபாயில் தமிழக தொழிலாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ்
துபாய்: துபாய் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் அங்குள்ள தமிழக தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார்.துபாய் தமிழ்ச் சங்கத்தின் கலைச்சங்கமம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சி. சுப்ரமணியம், பி. கக்கன் ஆகியோரது நூற்றாண்டு விழாக்கள் துபாயில் நடந்தது.
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் இதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கடந்த 5-ம் தேதி தொழிலாளர் முகாம்களில் உள்ள தமிழக தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தொழிலாளர் முகாமுக்கு வந்த அவருக்கு அவரது தொகுதியான கடையநல்லூர் மற்றும் தென்காசி பகுதி பணியாளர்கள் மலர்க்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் சிறப்பான வரவேற்பளித்தனர்.
பணியாளர்களின் கோரிக்கைகளை செவியுற்ற சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், வெளிநாடு வாழ் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நலவாரியம் மற்றும் அதற்கான தனி அமைச்சகம் அமைக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப் போவதாக உறுதியளித்தார்.