யுனெஸ்கோ சின்னங்களை பார்க்க பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா: கனிமொழி தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழகத்தில் உள்ள யுனெஸ்கோ' பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பார்ப்பதற்காக புறப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளின் 3 கல்வி சுற்றுலா பயணத்தை கவிஞர் கனிமொழி எம்.பி. நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
ரோட்டரி கிளப் ஆப் திருச்சி மிட் டவுன் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வினாடி வினாப் போட்டி நடத்தி வருகிறது. இதில் இந்தியாவில் இருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணாக்கர்களை இலவசமாக கல்விச் சுற்றுலா அனுப்பி வைக்கின்றது.
இந்த ஆண்டு மாவட்டம் அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 36 பேர் வெற்றி பெற்றனர். அவர்களை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக திகழும் சோழர்கால கோவில்கள், தஞ்சை கங்கைகொண்ட சோழபுரம், பெரிய கோவில், கும்பகோணத்தில் உள்ள தாராசுரம், சென்னை மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்.
இந்த சுற்றூலாப் பயணத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள போட் கிளப்பில் நேற்று காலை நடந்தது. இதில் கலந்து கொண்ட கவிஞர் கனிமொழி எம்.பி. சுற்றுலாப் பயணத்தை துவக்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது,
நம் நாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் குறைந்த அளவே இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் பாரம்பரியச் சின்னஙக்ளைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் அயல் நாட்டில் இருக்கும் ஆல்ப்ஸ் மலையைப் பற்றிய புள்ளி விவரம் நம்மிடம் இருக்கும். இது தான் இப்போதைய நிலை.
கடந்த மாதம் தான் தஞ்சை பெரிய கோவிலின் 1000-ம் ஆண்டு நிறைவு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்வளவு அருமையான கலை நுணுக்கங்களோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஓர் அற்புத்க் கோவிலைக் கட்டியிருக்கின்றனர் என்பதை நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. பெரிய கோவில் நமக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் ஆகும்.
வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினை நடத்துவதால் அவர்கள் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை, கலை, பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். பாரம்பரிய சின்னங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஹெரிட்டேஜ் கிளப் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு தொண்டு நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும் என்று அவர் பேசினார்.