பத்திரிக்கைகள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும்-அமைச்சர் அந்தோணி கோரிக்கை
திருவனந்தபுரம்: பத்திரிக்கைகள் நடுநிலயோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் பத்திரிக்கையாளர் சங்கத்தின் 48-வது மாநில மாநாட்டை ஏ.கே. அந்தோணி நேற்று துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
பத்திரிக்கையாளர்களின் சிரமங்களை அறிவேன். குறைந்த சம்பளம், நிச்சயமற்ற வேலை போன்ற பிரச்சனைகள் உள்ளன. பத்திரிக்கைகள் மற்றும் செய்தி நிறுவன ஊழியர்களுக்கான ஊதியக் குழு அறிக்கை விரைவில் சமர்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.
நீதித்துறையின் மீதும், ஜனநாயகத்தி்ன் 4-வது தூணாக கருதப்படும் பத்திரிக்கைகளின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஊடகத் துறையின் அடிப்படைக் கொள்கைகளான நடுநிலைமை, நேர்மை, குறிக்கோள் ஆகியவற்றின் அடிப்படையில் பத்திரிக்கையாளர்கள் செயல்பட வேண்டும். பத்திரிக்கைகள் நடுநிலையோடு பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்.
செய்தியின் உண்மையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை வலுபடுத்தும் கடமையும், பொறுப்பும் பத்திரிக்கைகளுக்கும், தொலைகாட்சிகளுக்கும் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.