கல்வி தான் மனிதனை உயர்த்தும்! - அமைச்சர் உபயதுல்லா பேச்சு
தஞ்சாவூர்: கல்வி ஒன்று தான் மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா கூறினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஓலைச் சுவடித் துறை, உபயதுல்லா அறக்கட்டளை மற்றும் காசி குமரகுருபரர் மாநாட்டு நினைவு அறக்கட்டளை இணைந்து சுவடிகள் பாதுகாப்பு பயிலரங்கை நடத்தியது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத் துணை வேந்தர் ராசேந்திரன் தலைமை தாங்கினார்.
பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி தமிழக அமைச்சர் உபயதுல்லா பேசியதாவது,
இந்த மண்ணில் யார் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஆற்றிய சிறந்த பணிகள் தான் போற்றப்படும். உலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தவர்களைப் போற்றுவது நமது தலையாய கடமை.
நமது முன்னோர்கள் எழுதி வைத்த ஓலைச்சுவடிகள் இன்று நவீன முறையில் நமக்கு பல அரிய தகவல்களை அளிக்கிறது. இலக்கியங்கள் நமது கைகளில் தவழ ஓலைச்சுவடிகள் தான் காரணம்.
ஒவ்வொரு மனிதனும் பெயரோடும், புகழோடும் சிறப்பாக வாழ வேண்டும். அதற்குத் தேவையான முயற்சிகளையும், முறையான பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கல்வி ஒன்று தான் மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும். நட்புள்ளம், கொடையுணர்வு போன்றவை பிறவியிலேயே இருக்க வேண்டும், என்றார்.












Click it and Unblock the Notifications