மகளிர் இட ஒதுக்கீடு மசோதா-இனி 181 எம்.பி. தொகுதிகள் பெண்களுக்கு

கடந்த 14 ஆண்டுகளாக கனவாகவே இருந்து வந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நேற்று ராஜ்யசபையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. அடுத்து லோக்சபாவில் அது நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் மாநில சட்டசபைகளிலும் இதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.
இந்த நடைமுறைகள் முடிந்த பின்னர் இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டவுடன் இது சட்டமாகி விடும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின்னர் எப்படி லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
சுழற்சி முறையில் மகளிருக்கு லோக்சபா மற்றும் சட்டசபைத் தொகுதிகள் இந்த சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும்.
தற்போது லோக்சபாவில் 543 தொகுதிகள் உள்ளன. அதேபோல மாநிலங்களில் மொத்தம் 4,109 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.
இதில், 181 லோக்சபா தொகுதிகள் பெண்களுக்கானதாக மாற்றப்படும். இவை சுழற்சி முறையில் ஒதுக்கப்படும். அதாவது குறிப்பிட்ட காலத்திற்குள் 543 தொகுதிகளிலும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இது இருக்கும்.
அதேபோல சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தவரையில், 1370 தொகுதிகள் பெண்களுக்கானதாக மாற்றப்படும்.
மகளிருக்கான இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின (எஸ்.சி, எஸ்.டி) ஆகியோருக்கான தனி தொகுதிகளுக்கும் பொருந்தும்.
தற்போது 543 லோக்சபா தொகுதிகளில் 122 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினோருக்கான தனித் தொகுதிகள் ஆகும்.
ஒரு தனித் தொகுதி மட்டும் இருந்தால்...?
தற்போது ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ஒரு தனித் தொகுதி மட்டும் இருந்தால், அந்தத் தொகுதி, ரொடேஷன் முறையில் பயன்படுத்தப்படும்.
அதாவது ஒரு தேர்தலில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினப் பெண்கள் அதில் போட்டியிடுவார்கள். அடுத்த 2 தேர்தல்களில் இது பொதுவான தனித் தொகுதியாக செயல்படும். அதாவது ஆண்களும் போட்டியிடலாம்.
ஆக, ஒவ்வொரு மூன்று தேர்தலுக்கும் இதுபோல அது மாறிக் கொண்டே வரும்.
சரி, 2 தனித் தொகுதிகள் இருந்தால்...?
ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இரண்டு தனித் தொகுதிகள் இருந்தால், ஒரு தொகுதி மட்டும், முதல் இரண்டு பொதுத்தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
மூன்றாவது பொதுத்தேர்தலில் அந்த சமுதாய பெண்களுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது.
இதுவும் 3 பொதுத் தேர்தலுக்கு ஒரு முறை இதே வரிசையில் மாறிக் கொண்டே வரும்.
ஒரு பொதுத் தொகுதி மட்டும் இருந்தால்...?
தற்போது ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில், அங்கு இட ஒதுக்கீடு எப்படி அமல்படுத்தப்படும் என்றால்,
அந்த தொகுதி, ஒரு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதில் அனைத்து சமுதாயப் பெண்களும் போட்டியிடலாம்.
ஆனால், அடுத்து வரும் இரண்டு பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது.
ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ பொதுத் தொகுதி இரண்டு இருப்பதாக வைத்துக்கொண்டால், முதல் இரண்டு பொதுத் தேர்தல்களில், ஒரு தொகுதி மட்டும், அனைத்துப் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்து வரும் மூன்றாவது பொதுத் தேர்தலில் எந்த தொகுதியும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது.
ஒவ்வொரு 3 பொதுத் தேர்தல்களுக்கும், இதே வரிசைப்படி, இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும்.
இதே பாணியில்தான் அனைத்து சட்டசபைத் தொகுதிகளும் பெண்களுக்குப் பிரித்து அளிக்கப்படும்.
தமிழகத்திலும் மசோதா நிறைவேற்றப்படும்-அன்பழகன்:
ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தமிழக சட்டசபையிலும் நிறைவேற்றப்படும் என்று மாநில நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கோவை புலியகுளத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில்,
பெரியாரின் கொள்கையின் வழியிலும், அண்ணாவின் வழிகாட்டுதலிலும் தி.மு.க. அரசு பல்வேறு சரித்திர சாதனைகளை நிறைவேற்றி வருகிறது. 1989-ம் ஆண்டு, பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க.தான். இதேபோல் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதிலும் தி.மு.க. அரசுதான் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.
தமிழக உள்ளாட்சிகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்து தேர்தல் நடத்தியதால்தான் இன்று உள்ளாட்சிகளில் 33 சதவீதத்துக்கும் அதிகமாக பெண்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 2 மாநகராட்சிகளில் பெண்கள் மேயராக பதவி வகித்து வருகிறார்கள்.
பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
விரைவில் லோக்சபாவிலும் நிறைவேறும். அனைத்து சட்டசபைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் முழு அங்கீகாரம் கிடைக்கும்.
எனவே தமிழக சட்டசபையில் இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி சார்பாக நான் கூறிக்கொள்கிறேன் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications