தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா தொடங்கியது : தஞ்சை விழாக் கோலம்
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.
பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா 5 நாட்கள் நடக்கிறது.
இதை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். முதல் நிகழ்ச்சியாகத் தஞ்சை சங்கமம் நடைபெற்றது. இதையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து தஞ்சை நாடிராவ் குழுவினரின் பொய்க்கால் குதிரையாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டமும், மற்ற குழுவினரின் கும்மிகோலாட்டம், சிலம்பாட்டம், தேவராட்டம், கோலாட்டம், செண்டை மேளம், பறையாட்டம், வேடர் ஆட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் தப்பாட்டம், தெருக்கூத்து, பம்பை, நாட்டுப்புற ஆடல், பாடல்நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், புலியாட்டம், வில்லிசை, பெரிய மேளம், கன்னியான் கூத்து வரலாற்று நாடகத்தை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
கலை நிகழ்ச்சிகள் தஞ்சை சிவகங்கை பூங்கா, ராஜராஜன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கரந்தையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை நாளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
காலை 10 மணிக்கு இந்திய பெருமைக்கு தஞ்சையின் பங்களிப்பு என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள கரிகாற்சோழன் கலையரங்கத்தில் ஆய்வரங்கம் நடைபெறவிருக்கிறது. இதை தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.