சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் இன்று ஆடி தபசு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இன்று ஆடி தபசு விழா நடக்கிறது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடிதபசு விழா கடந்த 15-ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு ஆராதனை, தவக்கோலத்தில் கோமதி அம்மன் வீதி உலா வருதல், மாலையில் மண்டகப்படி கட்டிடங்களுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வரும் அலங்காரத்தில் அம்மன் ரதவீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஆடிதபசு காட்சி நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கோவில் உள் பிரகாரத்தின் மேல் பகுதியில் சுவாமி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. காலை 11.45 மணிக்கு கோமதி அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு சென்றார்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதியுலா சென்று 6.05 மணிக்கு கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி அளிக்கும் தபசு காட்சி நடக்கிறது.
இரவு 11 மணி அளவில் சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சாமியாக கோமதியம்மைக்கு காட்சி அளிக்கும் 2வது தபசு காட்சி நடக்கிறது. நாளை (26ம் தேதி) சுவாமி, அம்மன் பட்டணபிரவேசம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆடி தபசு விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.