கல் குவாரிகளால் ஆபத்து-ஆனைமலையை நிலநடுக்கம் தாக்கும் அபாயம்

பொள்ளாச்சியை அடுத்து ஆனைமலை உள்ளது. அங்கு சேரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற சேனைக்கல்ராயர் பெருமாள் கோவில் உள்ளது. இது மலை மேல் அமைந்துள்ளது. இதன் அருகே அரசு அனுமதி பெற்று 2 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. அங்கு வெடி வைத்து பாறைகளைத் தகர்ப்பதால் சேனைக்கல்ராயர் பெருமாள் கோவில் சேதம் அடையும் என்று பக்தர்கள் அஞ்சுகின்றனர்.
இது குறித்து மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலைய முன்னாள் விஞ்ஞானி யக்ஞ நாராயணன் கூறியதாவது,
கல் குவாரிகளால் மலை கோவிலுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து கண்டறிய நானும், என் சகாக்களும் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டோம்.
ஆனைமலையில் 1900, 1981-ம் ஆண்டுகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சேனைக்கல்ராயர் பெருமாள் கோயில் ஏற்கனவே சிதிலமடையும் நிலையில் இருக்கிறது. பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு அதை பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலைக்கோயில் அருகே 2 கல் குவாரிகள் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. அங்கு பாறைகளைத் தகர்ப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
பாறைகள் தகர்க்கப்படும்போது அருகில் உள்ள இடங்களும் அதிரும். இதனால் பெருமாள் கோவிலுக்கு மட்டுமின்றி அதே பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
கல் குவாரிகள் இவ்வாறு ஜெலட்டினை பயன்படுத்தி பாறைகளை வெடிக்கச் செய்தால் விரைவில் ஆனைமலையில் மீண்டும் ஒரு நிலநடுக்கத்தை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications