தமிழகம் முழுவதும் கோவில் ஊழியர்கள் ஸ்டிரைக்-பூஜையில் பாதிப்பில்லை
சென்னை : தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முக்கியக் கோவில்களில் பூஜை போன்றவை பாதிக்ப்படவில்லை.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 38 ஆயிரத்து 421 கோவில்கள் உள்ளன. கோவில் நிர்வாக அதிகாரி பணியில் துவங்கி, அர்ச்சனை, அபிஷேகம், சிறப்பு வழிபாடு, முடிகாணிக்கை வழங்குவதற்கான கட்டண டிக்கெட் வழங்குதல், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தல், பக்தர்களை ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் ஊழியர்களுக்கு சமீபத்தில் சம்பள உயர்வை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் ஆறாவது சம்பளக் கமிஷன்படி அரசு அறிவித்த சம்பள உயர்வை விட, அறநிலையத்துறை நிர்வாகம் தங்களுக்கு குறைவான சம்பள உயர்வை வழங்கியுள்ளதாக கூறி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாணையின்படி 40 சதவீத சம்பள உயர்வு; சம்பள நிலுவையில் ஒரே தவணையில் வழங்குதல்; சம்பளச் செலவு உச்சவரம்பை கைவிடுதல்; தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் பெறும் முழுநேரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கி சம்பள விகிதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில் பணியாளர்கள் இன்று ஸ்டிரைக் செய்ய அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிலுக்குள்ளேயே இருப்பது, அதேசமயம், அர்ச்சனை, அபிஷேக டிக்கெட் தருவது, வருகைக் கட்டண டிக்கெட் தருவது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று ஸ்டிரைக் தொடங்கியது. இருப்பினும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முக்கியக் கோவில்களிலும் பூஜைகள் பாதிக்கப்படவில்லை.
பக்தர்களுக்கு அர்ச்சனை, அபிஷேக டிக்கெட்களை விற்பதற்கு மாற்று ஏற்பாடுகளை கோவில் நிர்வாகங்கள் செய்திருந்தன.












Click it and Unblock the Notifications