தடுப்புச் சுவரை அகற்றக் கோரி கன்னடியன் கால்வாயை முற்றுகையிட்ட விவசாயிகள்
அம்பாசமுத்திரம்: கன்னடியன் கால்வாயில் புதிதாக கட்டப்பட்ட தடுப்புச் சுவரை அகற்றக் கோரி விவசாயிகள் கல்லிடைக்குறிச்சியில் உள்ள கால்வாயை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கல்லிடைக்குறிச்சியில் உள்ள கன்னடியன் கால்வாயில் இருந்து தடுப்புச் சுவர் சுமார் ஒன்றரை மீட்டர் உயர்த்தி கட்டப்பட்டது. இதனால் ஸ்ரீவைகுண்டம் கால்வாய்க்கு தண்ணீர் குறைவாக வருகிறது. இது விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை.
தடுப்புச் சுவர் உயர்த்துவதற்கு முன் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் 3 நாட்களுக்குள் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு தண்ணீர் வந்துவிடும். ஆனால் தற்போது 15 நாட்களாகியும் ஸ்ரீவைகுண்டம் கால்வாய்க்கு தண்ணீர் குறைவாகவே வருகிறது. எனவே உயர்த்தப்பட்ட தடுப்புச் சுவர் பகுதியை அகற்ற வேண்டும் எனக் கோரி நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 68 சங்க விவசாயிகள் கல்லிடைக்குறிச்சியில் உள்ள கன்னடியன் கால்வாயை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தாமிரபரணி வடிநில திட்டக்குழுத் தலைவர் உதய சூரியன் கூறுகையில்,
கல்லிடைக்குறிச்சியில் உள்ள கன்னடியன் கால்வாயில் உயர்த்தி கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரால் தூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் சுமார் 78 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்புச் சுவரை உயர்த்துவதற்கு முன் யாரிடமும் கருத்து கேட்கவில்லை. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications