நெல்லை-தென்காசி அகலப்பாதை முறைகேடு: தகவல் கசிந்ததால் தடயங்களை அழித்த ஊழியர்கள்
நெல்லை: நெல்லையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தும் தகவல் முன்கூட்டியே கசிந்ததால் நெல்லை, தென்காசி அகலப் பாதை முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் அதுதொடர்பான தடயங்களை அழித்ததாக கூறப்படுகிறது.
நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பணிகளில் லட்சக்கணக்கில் முறைகேடு நடத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 23-ம் தேதி நெல்லை வந்து முகாமிட்டனர்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் கட்டுமான பிரிவு அலுவலகத்தில் 24-ம் தேதி முதல் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் வரும் தகவல் முன்கூட்டியே நெல்லை கட்டுமான பிரிவுக்கு கசிந்துள்ளது. இதனால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அந்த தடயத்தை அழித்துள்ளனர்.
இதனால் போலீசார் சோதனையில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் ஒரு சிலர் அழித்துள்ள தடயங்கள் குறித்த தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணங்களை மட்டும் போலீசார் எடுத்து கொண்டு சென்னை சென்றுள்ளனர்.
குறிப்பாக நெல்லை-தென்காசி வழித்தடத்தில் அகலப்பாதை பணிகளில் பாலம் கட்டியதில் சிமிண்ட் மூடைகளின் எண்ணிக்கை குறைவாக காட்டப்பட்டுள்ளது. சோதனையில் அந்த எண்ணிக்கையை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் திருத்தியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தரமற்ற பொருட்களை பயன்படுத்திவிட்டு அதையும் மாற்றியுள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இப்பிரிவில் பணியாற்றுகிறார். இவரை பொறி வைத்து பிடிக்கவே லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லைக்கு ரகசியமாக வந்துள்ளனர். ஆனால் தகவல் தெரிய வந்ததால் அந்த அதிகாரி எளிதாக தவறுகளை திருத்தி தப்பித்துள்ளார். இந்த திடீர் சோதனையால் ரயில்வே கட்டுமான பிரிவில் பணியாற்றும் ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications