கொல்லம் அருகே பிரம்மா கோயிலில் 170 குடில்களில் தீ: பக்தர்கள் தப்பினர்
கொல்லம்: கொல்லம அருகே உள்ள பரபிரம்மா கோயிலில் பக்தர்கள் தங்கியிருந்த 170 குடில்கள் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஒச்சிரா பகுதியில் பரபிரம்மா கோவில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பஜனை நடந்து வருவதையொட்டி பக்தர்கள் தங்குவதற்காக கோவில் அருகே உள்ள ஒண்டிக்காவு பகுதியில் 50 குடில்களும், எட்டுக்கண்டம் பகுதியில் 150 குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் இந்த குடில்களில் தங்கியிருந்த பக்தர்கள் அனைவரும் பூஜைக்காக கோயிலுக்கு சென்றிருந்தனர். அப்போது ஒண்டிகாவு பகுதியில் இருந்த குடில்களில் திடீரென தீப்பிடித்தது.
தகவல் அறிந்த காயங்குளம், கருநாகப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் 50 குடில்களும் எரிந்து சாம்பலாயின. இதைத்தொடர்ந்து சில மணி நேரத்திலேயே எட்டுக்கண்டம் பகுதியில் இருந்த குடில்களிலும் தீ பிடித்தது.
தீயணைப்பு படையினர் வந்து தீயை அமைக்க முயன்றபோதிலும் 120 குடில்கள் எரிந்து நாசமாயின. இந்த சம்பவம் நடந்தபோது பக்தர்கள் கோவிலுக்குச் சென்றிருந்ததால் உயிர் இழப்பு இல்லை.
குடில்கள் அடுத்தடுத்து தீப்பிடித்ததற்கு மர்ம நபர்களின் நாசவேலை காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.