218 தொடக்க பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு: அரசு உத்தரவு
நெல்லை: தமிழகத்தில் இந்தாண்டு 228 தொடக்க பள்ளிகள் புதிதாக தொடங்கவும், 218 தொடக்க பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய கல்வி என மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளதை அடுத்து கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்தாண்டு புதிதாக 228 தொடக்க பள்ளிகள் தொடங்கவும், 218 தொடக்க பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிதாத தொடங்கப்படும் தொடக்க பள்ளிகளுக்கு 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்காகவும், தளவாட சாமான்கள் வாங்குவதற்காகவும் ரூ.18.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு இடைநிலை ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என மொத்தம் 456 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் வரை வாடகை கட்டிடங்களில் இயங்கவும், இதற்கு அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ஒரு ஆசிரியருக்கு குறைந்தது 20 மாணவர்களாவது பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றும் தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட தொடக்க பள்ளிகளுக்கு 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்காகவும், தளவாட சாமான்கள் வாங்குவதற்காகவும் 218 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.23.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் 218 பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமிக்கப்பட உள்ளனர்.