அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 30ம் தேதி தமிழ் இணையப் பயிலரங்கம்
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும். அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கி வைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.
தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத் தலைவரும்,புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.
அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப ஜனவரி 30 சனிக் கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார்.
பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர், பொறியியல் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் வ.செயதேவன், (சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத் துறை,சென்னைப் பல்கலைக்கழகம்)வாழ்த்துரைக்க உள்ளனர்.
முனைவர் மு.இளங்கோவன் (பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி), தமிழ் நிலவன் (கணிப்பொறி வல்லுநர், பெங்களூரு) விசயகுமார் (ஆசிரியர், சங்கமம் லைவ், நாமக்கல்), செல்வ முரளி(ஆசிரியர், தமிழ் வணிகம், சேலம்), கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.
பல்கலைக் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில் இதுவே முதல் முயற்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: முனைவர் மு.இளங்கோவன் [email protected]












Click it and Unblock the Notifications