சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா தொடங்கியது
பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை கோவில் திருநடை நேற்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது.
பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
கோவில் மேல் சாந்தி விஷ்ணு நம்பூதிரி முன்னிலையில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு திருக்கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.
வருகிற 29ந் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்ரீதர்மசாஸ்தா அய்யப்ப சுவாமிக்கு பம்பை நதியில் ஆராட்டு நடைபெறுகிறது.
10ம் திருவிழாவான 29ம் தேதி காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து யானை மீது ஐயப்ப சுவாமி பவனி தொடங்குகிறது.
11.30 மணியளவில் பம்பை நதியில் சுவாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது.
மாலை 3 மணிக்கு கன்னிமூல கணபதி கோவிலில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி பவனி புறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டு, 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.