கர்நாடக தங்க ரதம் தமிழகத்துக்கு வருகிறது
பெங்களூர்: கர்நாடகாவின் தங்க ரத சொகுசு ரயில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவுக்கும் இயக்கப்படும் என்று கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் ஜனார்தன ரெட்டி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
வரும் 15ம் தேதி தொடங்கும் இந்த சுற்றுலா திட்டம் ஏழு இரவு மற்றும் எட்டு பகல் கொண்டது. 'சதர்ன் ஸ்ப்லெண்டர்' என்ற பெயரில் இந்த தென்னக சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், பிரபல கோயில்கள், கலாச்சார அடையாளங்கள் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கலாம்.
கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், இந்திய ரயில்வே மற்றும் இதர மாநிலங்களின் சுற்றுலாத் துறைகளோடு இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த தங்கரத ரயில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, திருவனந்தபுரம், ஆலப்புழா, கொச்சி ஆகிய இடங்களுக்கு சென்று மீண்டும் பெங்களூர் வந்தடைகிறது.
தங்க ரதத்தில் இரண்டு பேர் தங்கும் அறைகளுக்கு கட்டணமாக ஓரிரவுக்கு ரூ.15 ஆயிரமும், மூன்று பேர் தங்கும் அறைகளுக்கு ரூ.12 ஆயிரத்து 250ம் வசூலிக்கப்படும்.
தங்க ரதம் வரிசையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் வெள்ளி ரதம் இயக்கவும் கர்நாடக சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த கட்டணத்தில் இந்த வெள்ளி ரத சுற்றுலா திட்டம் அமையும் என அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் கூர்க், பத்ரா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை உள்ளடக்கிய இந்த சுற்றுலா திட்டம் ஆறு இரவு மற்றும் ஏழு பகல் கொண்டது.
இதற்கு கட்டணமாக பயணி ஒருவருக்கு தலா ரூ.22 ஆயிரம் வசூலிக்கப்படும். உணவு, தங்கும் வசதி மற்றும் நுழைவுக் கட்டணங்கள் அத்தனையும் இதில் அடங்கும்.
நாளை முதல் இதற்கான முன் பதிவு தொடங்குகிறது. www.karnatakaholidays.net என்ற முகவரியில் முன் பதிவு செய்யலாம்.












Click it and Unblock the Notifications