மஹா சிவராத்திரி - லட்ச தீப ஒளியில் ஜொலித்தது திருவண்ணாமலை கோவில்!

மாசி மாதம் மஹா சிவராத்திரி நாளில் சிவபெருமான் அடிமுடி காண இயலாத ஜோதி பிழம்பாக, லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி தந்ததாக ஐதீகம்.
இந்த வரலாறு நிகழ்ந்த இடமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும்.
நேற்று மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு காலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை கோயிலில் லட்சார்ச்சனை நடந்தது.
அதைத் தொடர்ந்து பகல் 3 மணியிலிருந்து பக்தர்கள் கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண உப்புகளால் கோலங்கள் வரையத் தொடங்கினர். அர்த்தநாரீஸ்வரர், சிவன், பார்வதி, பிரதோஷ நாயகர் உள்பட பல்வேறு கோலங்களும் வரைந்தனர்.
அதே போன்று கோவில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகள் வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுவதற்கு தயாராக வைத்திருந்தனர்.
மாலை 6 மணிக்கு அதில் பக்தர்கள் தீபம் ஏற்றினர். கோவில் வளாகம் முழுவதும் அகல் விளக்கு ஏற்றப்பட்டதால் அருணாசலேஸ்வரர் கோவில் தீப ஒளியில் ஜொலித்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் நேற்று சனி பிரதோஷத்தை ஒட்டி, பெரிய நந்தி உள்பட அனைத்து நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
கோவில் கலையரங்கில் மாலை 5.30 மணிக்கு தேவார இசையுடன் கலை நிகழ்ச்சிகளும், பெரிய கோபுரம் அருகே பிச்சாண்டி குழுவினரின் 108 நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடந்தது.












Click it and Unblock the Notifications