பிரதமரின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதவுள்ள மகள்: தந்தையின் நேர்மையைக் கண்டு வியப்பு
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் உபிந்தர் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இன்போசிஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள சமூக பணிக்கான முதல் விருதினை இவர் பெற்றார்.
பிரதமரின் 2-வது மகள் தமன்சிங் எழுத்தாளராக உள்ளார். இவர் இதுவரை 2 புத்தகங்களை எழுதி உள்ளார். "தி சேக்ரெட் குரோவ்'' என்ற புத்தகத்தை கடந்த வாரம் தான் வெளியிட்டார். இதில் தனக்குப் பிடித்த அரசியல்வாதிகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். இவர் அடுத்து தன் பெற்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுத உள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் என் பெற்றோர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக எழுத இருக்கிறேன். என் தந்தையின் நேர்மையைக் கண்டு நான் பெரிதும் வியக்கிறேன் என்று அவர் கூறினார்.
பிரதமரின் இளைய மகள் அம்ரித் நியூயார்க்கில் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.