தமிழின எதிரி ராஜபக்சே இந்தியாவில் வந்து ரத்தக்கறையை கழுவப் பார்க்கிறார் - சீமான்
சென்னை சாஸ்திரி பவன் முன்பு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்றார்.
அப்போது சீமான் பேசுகையில், இந்தியா வரும் ராஜபக்சேவை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழின எதிரியை எப்படி இந்தியாவுக்குள் அனுமதிக்கலாம்.
எம் இனத்தை அழித்த கொடுங்கோலனுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு என்பது எம்மை வேதனைக்கு உள்ளாக்குகின்றது.
எம்மினத்தை அழித்த உலகின் மிகப்பெரிய கொடுங்கோலர் ஒருவர் எவ்வித கேள்வியும் இன்றி உயரிய மரியாதையுடன் இந்தியா வருவதை நினைக்கும் பொழுது நாதியற்ற இனமா நம் தமிழினம் என்னும் குரல் உலகம் முழுவதும் நம் தமிழர்களிடையே எழுந்துள்ளது.
நாதியற்ற இனமல்ல நம் தமிழினம் என்பதை ஊருக்கும் உலகுக்கும் எடுத்துச் சொல்லவும் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் இன்று சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புக்கூட்டங்களை நடத்துகின்றோம்.
ராஜபக்ஷேவுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்த போதிலும் இந்தியா அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்ய்து அவரை தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. இது இங்கு வாழும் தமிழர்களை இழிவுபடுத்தும் ஒன்றாகும். அடக்குமுறைக்கு அஞ்சாது எமது எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவோம். எமது நோக்கத்தில் வெற்றிபெறும் வரையும் எமது இனம் விடுதலை அடையும் வரையும் தொடர்ந்து களத்தில் இறங்கிப் போராடுவோம்.
இத்தனை வருடங்களாக சர்வதேச இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தாத அந்நாட்டு அரசு இப்போது மட்டும் ஏன் இந்த விழாவை நடத்துகிறது.
இந்த விழா மூலம் தமிழர்களை படுகொலை செய்த ரத்தக்கறையை கழுவப்பார்க்கிறார் ராஜபக்சே. அதனால்தான் இப்போது இந்த விழாவை நடத்துகிறார். அவரின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் போகக்கூடாது என்றுதான் நடிகர்களை எதிர்க்கிறோம் என்றார்.
சாஸ்திரி பவனில் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்த இடத்தில் சீமான் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் மற்றும் நூற்றுக்கணக்கான நாம் தமிழர் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, நாம் தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ஜான்சி ராணி பூங்கா முன் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்ஷே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.













Click it and Unblock the Notifications