சென்னை பொது மருத்துவமனைக்கு பெரியார் பெயர்: கி.வீரமணி கோரிக்கை
சென்னை: சென்னை பொது மருத்துவமனைக்கு பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் அறிவு ஆசான் பெரியாரின் 132வது பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17ம் தேதி வருகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனையை அதிகம் பயன்படுத்தியவர் பெரியார். அவருக்கு மிக முக்கிய சிகிச்சைகளைத் தந்த மருத்துவமனை அதுதான்.
இறுதியில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குச் செல்லுமுன்கூட, சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதான் அங்கே சென்றார்.
அதுமட்டுமல்ல, தந்தை பெரியார் அவர்களை இந்த மருத்துவமனையில் அறிஞர் அண்ணா, பச்சைத் தமிழர் காமராசர், லோகியா போன்ற பல தலைவர்கள் சந்தித்து உரையாடி முக்கிய முடிவுகள்கூட எடுத்துள்ளனர்.
மதுரையில் உள்ள அரசினர் பொது மருத்துவமனை ராஜாஜி பொது மருத்துவமனை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தந்தை பெரியார் அவர்கள் பல காலம் தங்கி, சிகிச்சை பெற்ற அம்மருத்துவமனைக்கு அய்யா அவர்களின் பெயரைச் சூட்டி, அவர்தம் 132ம் பிறந்த நாள் விழாவில் ஓர் வரலாற்றுச் சாதனை புரிய வேண்டும் என்று திராவிடர் கழகத்தவர்கள் மாத்திரம் அல்ல, உலகெங்கும் உள்ள பெரியார் தொண்டர்கள், பெரியார் பற்றாளர்கள் சார்பில், ஈரோட்டுக் குரு குலத்தில் உருவான சுயமரியாதைக்காரரான நமது முதல்வர் கருணாநிதியை வேண்டிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
முத்துக்குமார் பெயர்-சீமான் கோரிக்கை:
இந் நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழமை வாய்ந்த சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தமிழருக்காக தன் ஒப்பற்ற தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் தியாகி தமிழர் முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும்.
தமிழர் தம் இனமானம் காக்கவும், தன்மானம் மீட்கவும் தன் இன்னுயிரை ஈந்தவன் முத்துக்குமார். எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவன் முத்துக்குமார்.
தமிழ்நாட்டிற்கு தொடர்பற்றவர்கள் பெயரெல்லாம் தமிழ்நாட்டின் வீதியெங்கும் சாலையெங்கும் சூட்டப்பட்டுள்ள நிலையில் தியாகி முத்துக்குமார் பெயர் சூட்டப்படுவதே மிகப் பொருத்தமானது.
ஆகவே முத்துக்குமார் பெயரைச் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கோரிக்கை வைக்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராடவும் தயாராக இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.