லாரிகளில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லத் தடை
சென்னை: லாரிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்துத் துறை ஆணையாளர் ராஜாராம் வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவ்வாறு செல்லும் பக்தர்கள் ஒப்பந்த ஊர்திகளிலும், சரக்குகள் ஏற்றக் கூடிய லாரிகளிலும் சென்று வருகின்றனர்.
கடந்த காலங்களில் இவ்வாறு பக்தர்களை ஏற்றிச் சென்ற லாரிகள் விபத்துக்கு உள்ளாகி அதில் பயணித்தவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. எனவே, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் லாரிகளில் செல்ல வேண்டாம்.
இதற்கு, மாநில எல்லையோர சாவடிகளை கண்காணிக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அனுமதி தரக்கூடாது. மேலும், பக்தர்கள் செல்லும் ஒப்பந்த ஊர்திகளை கண்காணித்து சட்ட விதிமுறைகளுக்கு முரணாக அதிக பயணிகளை ஏற்றுவது உள்ளிட்ட குற்றங்களுடன் தென்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து களப்பணியாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் லாரிகளில் செல்ல வேண்டாம். பயணிகள் பாதுகாப்பான வாகனங்களில் மட்டுமே சென்று வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.