ஆற்றுக்கால் திருவிழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா பக்திப் பரவசத்துடன் தொடங்கியது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி முதல் தினமும் பல்வேறு பூஜைகள், சினிமா நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, இன்னிசை விருது போன்றவை நடந்து வருகின்றன.
ஓன்பதாம் திருவிழாவான நேற்று காலை பள்ளியுணர்த்தல், நிர்மல்யா தரிசனம், அபிஷேகம், தீபாராதனை, உஷா பூஜை ஆகியவை நடந்தன.
இன்று காலை 10.10 மணிக்கு கோயில் முன்பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட பண்டார அடுப்பில் முதல் தீபம் ஏற்றப்பட்டு பொங்கல் தொடங்கியது.
கோவிலின் தலைமை குருக்கள் டி.எம்.முரளிதரன் நம்பூதிரிபாடு அடுப்பில் தீபத்தை ஏற்றினார்.
இந்த தீபத்தின் மூலம் லட்சக்கணக்கில் சூழந்திருந்த பெண்கள் நெருப்பை பெற்று, செங்கற்களால் அடுக்கி உருவாக்கப்பட்ட தங்களின் அடுப்பை பற்ற வைத்து மண் பானையில் அரிசி, வெல்லம், தேங்காய் கலந்த பொங்கல் சமைத்தனர்.
கிழக்கோட்டை தம்பானூர், பாளையம், ரயில்வே ஸ்டேஷன், ஜங்ஷன், கரமனை, பாபனங்கோடு உள்பட சுமார் 25 கி.மீ சுற்றளவுக்கு பொங்கலை சமைப்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.
பின்னர் இப்பொங்கல் படையலை அம்மனுக்கு மாலை 3.15 மணிக்கு நிவேத்திய அர்ப்பணம் செய்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக நெய்யாற்றின்கரை, களியாக்கவிளை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணி முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து குவியத் தொடங்கிவிட்டனர்.
பின்னணிப் பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் என பலரும் திருவிழாவில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications