50 வருடமாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதி 45 முறை தோல்வி கண்ட முதியவர்
லக்னோ: உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் உசேன் என்ற 66 வயது முதியவர் கடந்த 50 வருடங்களாக பத்தாவது வகுப்புத் தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 45 முறை தேர்வெழுதியுள்ள அவர் அத்தனை முறையும் பெயில் ஆகியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள பின்ட்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் உசேன். 66 வயதாகும் இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தன் 16-வது வயதில் முதன் முதலாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார். அதில் தோல்வி அடைந்தார். பிறகு படிப்பைத் தொடர முடியாமல் கடை வைக்க போய்விட்டார்.
என்றாலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எப்படியாவது தேர்வாக வேண்டும் என்று ஜாபர் உசேன் ஆசைப்பட்டார். மீண்டும், மீண்டும் எழுதியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. இப்படி 44 தடவை கடந்து விட்டது. வயதும் 66 ஆகிவிட்டது. இந்த நிலையில் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜாபர் உசேன், சமீபத்தில் 45-வது தடவையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். அதுவும் புட்டுக் கொண்டு விட்டது.
அதை விட தேர்வு எழுதிய ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களிலும் அவர் பெயிலாகி விட்டார். இருந்தாலும் ஜாபர் விடுவதாக இல்லை. அடுத்த வருஷம் தேர்வெழுதி எப்படியாவது பாஸ் ஆயிருவேன்ல என்று கூறி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 10-ம் வகுப்பில் பாஸ் ஆகி விட வேண்டும் என் பதை நான் வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளேன். ஒவ்வொரு தடவை தேர்வு எழுதி முடித்ததும் அதில் செய்த தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்று என்னை நான் திருத்திக் கொள்வதுண்டு. இந்த தடவை சில தவறுகளை செய்து விட்டேன். அடுத்த தடவை நிச்சயம் பாசாகி விடுவேன் என்றார்.