தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 7 ஆண்டு சிறைக் கைதிகளை விடுவிக்க முடிவு
நெல்லை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டை ஓட்டி 7 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய அரசு பரீசிலனை செய்து வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.
ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாளை ஓட்டி ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் அனுபவித்து மனம் திருந்திய கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அண்ணா நூற்றாண்டு விழாவை ஓட்டி 7 ஆண்டு தண்டனை அனுபவித்த 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு 10 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உலக செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கைதிகளின் கவிதைகள், மற்றும் ஆய்வு கட்டுரைகள் இடம் பெறுகிறது.
இந்தப் பின்னணியில், மாநாட்டை ஓட்டி 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 10 மத்திய சிறைகளில் 7 ஆண்டு தண்டனை அனுபவித்து மனம் திருந்திய கைதிகள் பட்டியலை அதிகாரிகள் மிகவும் ரகசியமாக தயாரித்து வருகின்றனர்.
கைதிகளின் நன்னடத்தை, குற்ற செயல்களின் தன்மை அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் விடுதலை செய்யப்பும் கைதிகள் குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இது நடந்தால், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து சுமார் 1500 கைதிகள் விடுதலை ஆவார்கள் என கூறப்படுகிறது. பாளையங்கோட்டை மத்திய. சிறையில் மட்டும் 100 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications