நவ 11 ந் தேதி, 11.11 மணிக்கு, 1 நிமிடம் மவுனம் காக்க மனித நேயப் பேரவை கோரிக்கை
கோவை: உலக சமாதானம் வேண்டி, வரும் 11ம் தேதி, ஒரு நிமிடம் மவுனமாக இருக்க மனித நேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவு பூங்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனித நேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவு பூங்கா அமைப்பின் கவுரவத் தலைவராக, நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலா உள்ளார்.
இந்த அமைப்பின் தமிழக பொதுச் செயலாளர் உமைதாணு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
பயங்கரவாதம், வேலையில்லாத் திண்டாட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வறுமை, எய்ட்ஸ், போதை மருந்து கடத்தல், வன்முறை, எழுத்தறிவின்மை, சுற்றுப்புறச்சூழல் மாசுபடுதல், போர் போன்ற 11 கொடுமைகள் நாட்டை விட்டு ஒழிய வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும்.
இதற்காக, அனைத்துக் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்க்கள், பொதுமக்கள் அனைவரும் நவம்பர் 11ம் தேதி 11.11 மணிக்கு 1 நிமிடம் மெளனம் காப்பதன் மூலம் உலக சமாதான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். எனவே இந்த நாளில் உலக சமாதானம் காக்க சபதம் ஏற்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications