சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் ரிசர்வேஷன் - முதல் நாளே அமோக வரவேற்பு
திருவனந்தபுரம்: நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன வசதிக்காக, சபரிமலையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. கேரள காவல் துறை இதற்காக ஏற்பாட்டினை செய்துள்ளது. இந்த இணையதள ரிசர்வேஷனுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கார்த்திகை ஒன்றாம் தேதி நாளை பிறக்கிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக் காலம் நாளை தொடங்குகிறது.
இதையொட்டி, சபரிமலை கோயில் மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி சசிநம்பூதிரி கோயில் நடையை திறப்பார். பின்னர், புதிய மேல்சாந்திகளாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பாலமுரளி நம்பூதிரி, ஈஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்கும் சடங்கு நடைபெறும்.
இதனையடுத்து கார்த்திகை 1ம் தேதி முதல் சபரிமலை கோயில் நடையை பாலமுரளி நம்பூதிரியும், மாளிகைபுரத்து அம்மன் கோயில் நடையை ஈஸ்வரன் நம்பூதிரியும் திறப்பார்கள். வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நாளை முதல் நெய் அபிஷேகமும் தொடங்கும்.
பாதுகாப்பு அதிகரிப்பு
மண்டல காலம் தொடங்குவதை முன்னிட்டு சபரிமலை கோயிலில் இந்த ஆண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சன்னிதானத்தில் 15 டிஎஸ்பிக்கள், 28 இன்ஸ்பெக்டர்கள், 100 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 900 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படுவார்கள். இவர்கள் தவிர மத்திய அதிரடி வீரர்களும், கமாண்டோ வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபட்டு இருப்பார்கள். பம்பையிலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு
நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன வசதிக்காக, சபரிமலையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.
கேரள உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செவ்வாய்கிழமையன்று இந்த உத்தரவை பிறப்பித்தனர். இதேபோல் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களான பம்பா, சந்நிதானம், நிலைக்கல்,எருமேலி உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு சுகாதார வசதியை செய்து தர வேண்டும் என்றும் ஆலய நிர்வாகத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் www. sabarimala.keralapolice. gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும்போது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் எண்ணை குறிப்பிட்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.
இதையடுத்து, அவர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கப்படும். பக்தர்கள் அந்த அனுமதி சீட்டை பிரின்ட் செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். தரிசன நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பாக சன்னிதானத்துக்கு வந்து விட வேண்டும். எந்த இடத்திலும் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. வரும்போது பக்தர்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படமும், அடையாள அட்டையும் கொண்டு வர வேண்டும். என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்தில் மாறுதல்
பேருந்து உள்ளிட்ட பெரிய வாகனங்கள் நிலைக்கல் பகுதியிலேயே நிறுத்தப்படும். அங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு பஸ்சில் பம்பைக்கு செல்ல வேண்டும். கார் உட்பட சிறிய வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும். ஆனால், பக்தர்கள் பம்பையில் இறங்கியதும் வாகனங்களை நிலைக்கல் பகுதிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.