குற்றாலத்தில் உல்லாச படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு
குற்றாலம்: குற்றாலத்தில் படகு சாவரிக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரே மாதத்தில் ரூ.3.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் ஆனந்தமாக குளிப்பது தவிர பிரதான பொழுதுபோக்காக படகு சவாரி விளங்குகிறது. குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் பொதுபணி துறை வெள்ளமடை குளத்தில் சுற்றுலா துறை சார்பில் படகு சவாரி விடப்படுகிறது. இதில் 2 மறறும் 4 இருக்கைகள் கொண்ட படகுகள், துடுப்பு படகுகள், தனிநபர் படகுகள் ஆகியவை உள்ளன. காலை 9 மணிக்கு படகு சவாரி துவங்கும் முன்னரே ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி படகு சவாரி துவங்கியது. நேற்று வரை ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் வசூலாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த மாதம் 11ம் தேதி ஒரே நாளில் ரூ.22 ஆயிரம் வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு சீசனில் மொத்த வருமானமே ரூ.4 லட்சத்து 77 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் படகுக்காக சுற்றுலா பயணிகள் பதிவு செய்து விட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் அளவிற்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. எனவே கூடுதலாக படகுகள் விட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications