தமிழ் எழுத்துரு குறித்து ஆராய நீதிபதி மோகன் தலைமையில் கமிட்டி
சென்னை: தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் 14 பேர் கொண்ட கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதுதொடர்பான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில்,
தமிழ் மொழி எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் ஆகியவற்றை கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்காக யூனிட் கன்சார்டியம் என்னும் நிறுவனம் ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து விரிவான விவாதம் தேவை என்றும் அதை விரிவாக விவாதித்து அரசுக்கு பரிந்துரை செய்ய முன்னாள் நீதிபதி மோகன் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க முதல்வர் ருணாநிதி ஆணை பிறப்பித்துள்ளார்.
அந்த குழுவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராஜேந்திரன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, கவிஞர் வைரமுத்து, கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் மு.அனந்த கிருஷ்ணன், பேராசிரியர் பொற்கோ, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஐராவதம் மகாதேவன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர்கள் சோ.ந.கந்தசாமி, அ.அ.மணவாளன், உலக தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவை பேராசிரியர் கே.நாச்சிமுத்து, தமிழ் இணைய கல்வி கழக இயக்குனர் ப.அர.நக்கீரன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக முதன்மை கல்வி அதிகாரி பொன்னவைக்கோ, தகவல் தொழில்நுட்ப வல்லுனர் அரவிந்தன், சீமென்டேக் கார்பரேஷன் முதுநிலை இயக்குனர் மணிவண்ணன், பேராசிரியர் என்.தெய்வசுந்தரம் ஆகிய 14 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு ஆய்வு செய்து தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்கு தெரிவிப்பதற்காக அறிக்கையை விரைவில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிரந்த எழுத்துக்களை யூனிகோட் எழுத்துருவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு யூனிகோட் கன்சார்டியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications