பெருந்தலைவர் காமராஜர் 109 பிறந்த நாள்: ஜெயலலிதா மரியாதை!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 109-வது பிறந்த நாள் நாடெங்கும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னையில் அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் காமராஜர் சாலையில் (கடற்கரை சாலை) கலங்கரை விளக்கம் அருகே உள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அதைச் சுற்றி மலர் மாலைகளால் அலங்கரித்தும் வைத்திருந்தனர். சிலைக்கு அருகே காமராஜர் படமும் வைக்கப்பட்டிருந்தது.
முதல்வர் ஜெயலலிதா, இங்கு வந்து காமராஜர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஜெயலலிதா மலர்தூவி மரியாதை
முதல்வர் ஜெயலலிதா நேற்று பிற்பகல் 2.05 மணிக்கு கோட்டையில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் வந்தார். கலங்கரை விளக்கம் அருகே உள்ள காமராஜர் சிலை இருக்கும் பகுதிக்கு 2.15 மணிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அங்கு வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செந்தமிழன், சண்முகநாதன், பச்சைமால், செல்லப்பாண்டியன், உதயகுமார், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலாளர் ராமநாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ராஜாராம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முக ஸ்டாலின் மரியாதை
சென்னை ஜிம்கானா கிளப் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், மேயர் மா. சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, ஜெ. அன்பழகன், முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் உள்பட மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர்கள்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, முன்னாள் அமைச்சர் பூவராகன், ஆர்.தாமோதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி.கே.தாஸ், தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எம்.குமார், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சி.மணி, ஜி.கே.வாசன் தேசிய பேரவை தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்பட பலர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, மண்டல தலைவர் ஜெயராமன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., துணை தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ., தமிழக பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் சிவனேசன் தொகுதி தலைவர் சக்திவேல், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாநில பொருளாளர் ஜி.ராஜன் தலைமையில் சென்னை மாவட்ட தலைவர் டி.மோகன்குமார் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
லட்சிய தி.மு.க. தலைவர் டி. ராஜேந்தர் மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உஞ்சை அரசன், இரா.செல்வம், துணை செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி, திராவிடர் கழக பொருளாளர் கோ. சாமி துரை, கலிபூங்குன்றன், தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில பொதுச்செயலாளர் வி.பி.இதயவண்ணன், புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாநில தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண், தமிழ்நாடு ராஷ்டிரிய ஜனதா தளம் மாநில செயல் தலைவர் கே.மோகன், ஜாக்குவார் தங்கம் உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
விஜயகாந்த்
காமராஜர் 109-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காமராஜர் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, துணை செயலாளர்கள் எஸ்.ஆஸ்டின், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டெல்லியில்....
டெல்லியில், தமிழ்ச்சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, டெல்லி சேனாபவன் எதிரில் உள்ள காமராஜர் அவென்iவில் நிறுவப்பட்டுள்ள காமராஜரின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து மந்திரி ஜி.கே.வாசன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications