கிரிமினல்களின் சொர்க்க பூமியாகும் கோவை மத்திய சிறை

முதல்வருக்கு மனு
கோவை மத்திய சிறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கைதிகளின் விதிமீறல்களுக்கு துணைபோகிறார். ஆனால் சிறைக் காவலர்கள் அவசர விடுப்பு அல்லது வேறு அனுமதிகள் கேட்டுச் செல்லும்போது அவர்களை சந்திக்காமல் தன் அறைவாசலில் மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கிறார்.
ஒரு சிறைக்காவலர் மரணப்படுக்கையில் இருக்கும் தனது தந்தையைப் போய் பார்க்க அவசரகால விடுப்பு கேட்டார். அந்த அதிகாரி விடுமுறை தர மறுத்துவிட்டார். கடைசிவரை மகனைப் பார்க்காமலேயே அந்த தந்தை இறந்து போய்விட்டார். தந்தையின் உயிர்பிரியும் நேரத்தில் அந்த காவலர் உடனிருந்து கவனிக்க முடியாமல் போனது.
மற்றொரு காவலர், பிரசவத்திற்காக தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விடுப்பு கோரினார்; விடுப்பு மறுக்கப்பட்டது. கண்காணிப்பாளரின் தலையீட்டின் பேரில் பின்னர் விடுப்பு வழங்கப்பட்டது. திருமணம், பிரசவம் மற்றும் இறப்புக்குச் செல்ல விடுப்பு வேண்டுமானால் சிறைக் காவலர்கள், அந்த அதிகாரிக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் கணக்கிட்டு மாமூல் வழங்க வேண்டிய அவலம் உள்ளது.
சிறைக்குள் செல்போன் புழக்கம்
கோவை மத்திய சிறைக்குள் ஏராளமான மொபைல்போன்கள் கைதிகளிடம் புழங்குகின்றன. அவற்றை கைப்பற்றி ஒப்படைக்கும் காவலர்களை, அதிகாரிகள் திட்டுகின்றனர். சிறைக்குள் மொபைல்போன் பயன்படுத்தும் கைதிகள், குறிப்பிட்ட ஒரு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து வருகின்றனர்.
கைதிகளுக்காக சிறைக்குள் இறைச்சி, இனிப்பு வகைகள், மொபைல்போன்கள், சிம்கார்டுகள், பீடி, சிகரெட் மற்றும் போதை வஸ்துகளை கடத்தி அதிகாரிகள் கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கிறார்கள்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தண்டனைக் கைதிகளிடம் 60-க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் 40 மொபைல்போன்கள் குறிப்பிட்ட ஒரு அதிகாரியின் கட்டுப்பாட்டில் புழங்குகின்றன.
வெளியிலிருந்து வரும் உணவு
புதிதாக சிறைக்குள் வரும் கைதிகளில் வசதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட சில வசதிகளை செய்து கொடுத்து தினமும் 500 ரூபாய் வசூலிக்கின்றனர். சில கைதிகளுக்கு வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன. 300 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் போதும்; சிகரெட், பான்பராக், ஹான்ஸ் போன்றவை உடனே கிடைக்கும்.
இது குறித்து சிறைக் கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி. ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிறைச்சாலைகளை, சிறைச்சாலை போன்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தவும், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிரிமினல்களின் சொர்க்கபுரி
ஜெயிலுக்குள்ளேயே அதிகாரிகளால் சகல வசதிகளும் செய்து தரப்படுவதால், கோவை சிறை கிரிமினல்களின் சொர்க்கபுரியாக விளங்குகிறது. சிறைக்குள் இருந்தபடியே நகருக்குள் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவற்றை அரங்கேற்றுகிறார்கள் கிரிமினல்கள்.












Click it and Unblock the Notifications