உணவு, உடை, தங்குமிடத்துடன் இலவச கல்வி பெற வேண்டுமா?
திருச்சி: இலவச கல்வி பெற விரும்பும் ஆதரவற்ற மாணவர்கள் திருச்சி அருகே உள்ள திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலை அணுகவும்.
இது குறித்து திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
கடந்த 60 ஆண்டுகளாக திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில் அனாதை சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சேவை செய்து வருகிறது. இங்கு தொடக்கப்பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றது.
முன்பு தாய், தந்தை இருவரும் இல்லாத சிறுவர்கள் மட்டுமே இங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு முதல் தாயோ அல்லது தந்தையோ ஒருவர் மட்டும் இருந்து, அவர்களால் படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் உள்ள குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஐ.டி.ஐ.யில் சேர்க்கப்பட்டு, தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உடை மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பு தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களை சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் கல்லூரியில், பாலிடெக்னிக் படிப்பில் சேர்க்கப்பட்டு பொறியாளர்கள் பணிக்கு வழி காட்டப்படுகின்றது.
திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடில் மாணவர்களை வாரம் ஒருமுறை டாக்டர் பரிசோதனை செய்கிறார். தேவைப்படுபவர்களுக்கு மருந்துகள் அளித்து, உடல்நலன் பாதுகாக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு ஓவியம், இசை, நாடகம், யோகா, கம்ப்யூட்டர் போன்ற சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
கடந்தாண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை சேர்க்க விரும்புவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண குடில், திருப்பராய்த்துறை, திருச்சி என்ற முகவரியில் தொடர்பு கொண்டால், மாணவர் சேர்க்கை படிவம் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications