சபரிமலையில் பக்தர்களுக்காக ரூ. 100 கோடியில் புதிய திட்டம் - உயர்மட்ட குழு முடிவு

சபரி்மலைக்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குறை உண்டு. இது குறித்து விவாதிக்க கொச்சியில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ. நாயர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிஜித்பாகாயத், கேரள கூடுதல் தலைமை செயலாளர் ஜெயக்குமார், தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சபரிமலை வரும் பக்தர்களுக்கு ரூ.100 கோடியில் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நிலக்கல் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யவும், அங்கு வாகனங்களை நிறுத்த கூடுதல் இடவசதி செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. தற்போது அங்கு 1000 வாகனங்களை நிறுத்தலாம். இதை 3 மடங்காக உயர்ந்த தேவையான வசதிகள் செய்யவும், நிலக்கல் பகுதியில் இருந்து பம்பைக்கு பக்தர்களின் வாகனங்களை அனுமதிக்க தடை விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பம்பையில் நெரிசலை குறைக்கும் வகையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் நிலக்கல் பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு கேரள அரசு பஸ்சில் தான் பம்பைக்கு செல்ல வேண்டும்.
நிலக்கல் பகுதியில் பம்பா நதியில் ஒரு தடுப்பணை கட்டி பக்தர்களுக்கு கூடுதல் தண்ணீர் வசதி செய்து தரப்படும்.
பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்வதற்கு ஒரு வழியும், திரும்பி வருவதற்கு ஒரு வழியும் அமைக்கப்படும். சன்னிதானத்தில் இருந்து திரும்புவதற்காக மட்டுமே அங்கு மேம்பாலம் அமைக்கப்படும்.
அப்பம், அரவணை தயாரிப்பு கூடத்தை சன்னிதானத்தில் இருந்து திரும்பும் வழியில் ஏதாவது ஒரு இடத்தில் அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
போதிய வசதியின்மை மற்றும் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக, சமீபத்தில் சபரிமலையில் ஏற்பட்ட விபத்தில் 109 பக்தர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications