சமூக சேவகி இலா பட்டுக்கு ஹார்வர்ட் விருது

இலாபட்டின் வாழ்க்கையும் பணியும் சமூக முன்னேற்றத்தை குறித்து இருப்பதாக தெரிவித்துள்ள அந்த இன்ஸ்டிடியூட் அதற்காக இந்த கவுரத்தை அளித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற இலா பட் “ எப்பொழுது பெண்களால் சொந்தமாக வருமானம் ஈட்ட முடிகிறதோ அப்பொழுதுதான் அவர்களால் சுயமாக போராடி வெற்றி பெறமுடியும்" என்று கூறினார்.
பெண்களுக்காக போராட்டம்
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பிறந்த இலா பட், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை அளிக்கும், “சேவா" என்ற அமைப்பை துவக்கி நடத்தி வருகிறார். சாலையோர வியாபாரிகள் பலர் இந்த அமைப்பின் மூலம் பலன் பெற்று வருகின்றனர்.
அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு சம்பந்தப்பட்ட தொழிலில் பயிற்சி அளித்து சுயவேலை வாய்ப்பு அளித்து வருகிறார் இலா. கடந்த 1973ல் அகமதாபாத்தில் ஜவுளி நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை என்பதற்காக, தலையில் துணிகளை சுமந்து சாக்கடையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர்.
கடந்த 1976ம் ஆண்டு குஜராத் அரசு விவசாய கூலிகளுக்கு குறைந்த பட்ச கூலியை நிர்ணயித்தது. இந்த கூலி, விவசாயிகளுக்கு கிடைக்கிறதா என்பதை கிராமம் கிராமமாக சென்று பார்வையிட்டு அரசு நிர்ணயித்த கூலியை விட குறைவாக கொடுத்த பண்ணையாளர்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்.
பெண்களுக்கான தொழிற்சங்கம்
“சேவா" அமைப்பின் சார்பில் 1974ம் ஆண்டு, “சேவா வங்கி"யை ஆரம்பித்து இலா சாதனை படைத்தார். தற்போது இந்த வங்கி, 12 கோடி ரூபாய் மூலதனத்துடன் சிறப்பாக இயங்கி வருகிறது. சட்டம் பயின்ற இலா பட் அகமதாபாத் ஜவுளி ஆலைகளின் தொழிற்சங்கம் சார்பில், பல வழக்குகளில் ஆஜரானவர்.
இந்த ஆலைகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்காக தனி தொழிற் சங்கத்தை துவக்கியவர். இவரது முயற்சியால், 1981ம் ஆண்டிலிருந்து அகமதாபாத்தில் பெண்களுக்கான தொழிற்சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 1979ம் ஆண்டு பெண்களுக்கான உலக வங்கி நிறுவப்பட்டது. இந்த வங்கி நிறுவனர்களில் இலாவும் ஒருவர்.
பட்டங்களுக்கு கவுரவம்
பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவர் இலா பட். கிராமப்புற பெண்களுக்கான மேம்பாட்டிற்காகவே அரை நூற்றாண்டுகளாக உழைத்து வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு இவரது மகத்தான சேவையை பாராட்டி ஹார்வர்டு பல்கலைக் கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.
கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் உயரிய, “நிவானோ அமைதி விருது" வழங்கப்பட்டது. ஆன்மிக வேட்கையுடன், காந்திய சிந்தனையுடன் உழைத்து வருவதற்காக, ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசு கொண்ட இந்த விருதை ஜப்பான் வழங்கியது. மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications