அழகர்கோவில், வேலூர் ஆலயங்களில் குடமுழுக்கு விழா- பக்தர்கள் சுவாமி தரிசனம்
மதுரை: மதுரையை அடுத்த அழகர் கோவில் சுந்தரராஜபெருமாள் ஆலயத்தின் மகா சம்ரோக்ஷண விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
அழகர் மலையில் உள்ள சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் மூலவர் விமானத்திற்கு தங்கத் தகடு வேயப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சம்ரோக்ஷன விழாவிற்காக 7.37 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு யாகசாலையில் அமைந்த குண்டங்களில் 52 கலசங்களில் இருந்த புனித நீருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
கோபுர விமானங்களுக்கு அபிஷேகம்
எட்டுக்கால பூஜைகள் நடைபெற்ற பின்னர் யாகசாலையில் இருந்த புனித நீர் கலசங்கள் கோபுரங்களை நோக்கி எடுத்துச்செல்லப்பட்டன. முதலில் மூலவர் தங்க விமானத்தில் அபிஷேகம் தொடங்கி, தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், வடக்கு கோபுரம், தொண்டமான் கோபுரம், ராமர், கிருஷ்ணர், அனுமன் சன்னதி, பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பச்சைக் கொடியை காட்ட, வேதமந்திரங்கள் முழங்கியதும் புனித நீர் திருக்கோயிலின் மூலவர் விமானம், கோபுரக் கலசங்களில் தெளித்து மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. அப்போது திருக்கோயிலை 5 கருடன்கள் வட்டமடித்தன. இதைக் கண்டு பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என பக்திப் பரவசமுடன் கோஷங்கள் எழுப்பினர்.
வேலூர் – ஜலகண்டேஸ்வரர்
வேலூர் கோட்டையில் கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமையான ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
குடமுழுக்கு விழாவை ஒட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 9 மணியளவில் மகா பூர்ணாஹுதியும், அதைத் தொடர்ந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது. புனித கலசங்கள் கோபுர உச்சியை அடைந்து வேத, மந்திரங்கள் முழங்க கோபுரக்கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
விழாவில் காஞ்சி ஜெயேந்திரர், ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா, கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில் பாலமுருகனடிமை சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியோர்கள் பங்கேற்றனர்.
கோவிலுக்காக ரூ.3 கோடியில் தயாரிக்கப்பட்ட தங்கத் தேர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
திருச்செந்தூர் – வருஷாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
இக் கோவிலில் 2.7.2009-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், மகா மண்டபத்தில் கும்ப கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, மூலவர் விமானத்துக்கு போத்திமார்களும், சண்முகர் விமானத்துக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் விமானத்துக்கு பட்டாச்சாரியார்களும் அபிஷேகம் செய்தனர். வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.
சௌந்தர்ய கனகாம்பிகை
இதேபோல் திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்தர்ய கனகாம்பிகை ஸ்ரீ அதுல்ய நாதேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில் ராஜகோபுரம் பக்தர்களிடம் இருந்து பெற்ற நிதியினால் புதிதாக அமைக்கப் பெற்று ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து நூதன ராஜகோபுரம், சௌந்தர்ய கனகாம்பிகை உடனாகிய ஸ்ரீஅதுல்யநாத பெருமானுக்கும், பரிவார தேவதைகள் மற்றும் கிராம தேவதைகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீவிஜயகணேசர் ஆலயம்
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணியில் உள்ள 150 ஆண்டு காலபழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விஜயகணேசர் ஆலய கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications