மகரஜோதி மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது-திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
திருவனந்தபுரம்: சபரி்மலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் தெரிவித்தார்.
சபரிமலையில் கடந்த மாதம் 14-ம் தேதி மகரஜோதி தினத்தன்று புல்மேட்டில் ஏற்பட்ட விபத்தில் 102 பக்தர்கள் பலியானார்கள். இதையடுத்து சபரிமலை கோயிலில் நெரிசலை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்குமாறு திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு அலுவலகத்தில் தலைவர் ராஜகோபாலன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சபரிமலை கோயில் தந்திரி குடும்பத்தினர், பந்தளம் மன்னர் பிரதிநிதிகள், கேரளாவைச் சேர்ந்த முக்கிய தந்திரிகள் மற்றும் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் கூறியதாவது,
நெரிசலை குறைக்க பதினெட்டாம் படியின் அகலத்தை கூட்டலாமா, வருடம் முழுவதும் கோயில் நடையை திறக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்து கோயி்ல்கள் அனைத்தும் தாந்திரக சாஸ்திரப் படி கட்டபட்டிருப்பதால் அவற்றில் மாற்றம் செய்வது நல்லதல்ல. மற்ற கோயில்களில் உள்ளதை விட சபரிமலையில் உள்ள 18-ம் படி தெய்வ சைதன்யம் உள்ளதாகும். எனவே அதில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தக் கூடாது என கருத்துக்கள் கூறப்பட்டன.
மேலும் சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்ட பிறகு ஐயப்பன் தவகோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே வருடம் முழுவதும் நடையை திறந்து வைக்க முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த கருத்துகள் குறித்து தேவசம்போர்டு மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி ஆலோசிக்கும். அதன்பின்னர் தேவசம்போர்டின் முடிவு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். மகரவிளக்கு மனிதரால்தான் ஏற்றப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதை தேவசம்போர்டும் அங்கீகரிக்கிறது.
நெரிசலை தவிர்க்க பம்பை மற்றும் சன்னிதானத்தில் வியாபார நிறுவனங்களுக்கு வாடகைகக்கு விடப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பக்தர்கள் வசதியாக நடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த சீசனுக்கு முன்பாக பம்பை மற்றும் சன்னிதானத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications