நெற்கட்டும் செவலில் பூலித்தேவனின் 296-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
புளியங்குடி: புளியங்குடி அருகே நெற்கட்டும் செவலில் மாமன்னர் பூலித்தேவரின் 296வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும் செவலில் வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலாக குரல் கொடுத்த மாமன்னர் பூலிதேவரின் 296-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதற்கு மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை தலைவர் ம. நடராசன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் பொருளாளர் அ. வேலாயுதசாமி வரவேற்புரை ஆற்றினார்.
அப்போது அறக்கட்டளை தலைவர் நடராசன் பேசியதாவது,
கடந்த 15 ஆண்டுகளாக நெற்கட்டும் செவலில் மாமன்னர் பூலித்தேவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 300-வது ஆண்டு விழா வெகுவிமரிசையாக கன்னியாகுமரியில் தொடங்கி இங்கு வரை நடத்த முடிவு செய்துள்ளேன். கடந்த மாதம் இங்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து எனக்கு தெரிய வந்தது. வரலாற்றை யாரும் மாற்றி அமைக்க முடியாது. பிரச்சனையின் போது அமைதி காத்த உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிலர் சுவரொட்டிகள், பெயிண்டால் எழுதினால் அது வரலாறு ஆகாது.
மாமன்னர் பூலித்தேவர் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்தவர். ஆங்கிலேய எழுத்தாளர் கால்டுவேல் எழுதிய புத்தகக்தில் இங்குள்ள 12 பாளையங்களின் சிறப்புகளை குறிப்பிட்டுள்ளார். மாற்று சமுதாயத்தினரை நாம் மதிக்கிறோம். அனைத்து சமுதாயத்தினரிடமும் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். பூலித்தேவனின் மூதாதையர்கள் 1378-ம் ஆண்டு முதல் 1726-ம் ஆண்டு வரை இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். 10வது மாமன்னராக பூலித்தேவன் பதவியேற்று 1726-ம் ஆண்டு முதல் 1756-ம் ஆண்டு வரை ஆட்சி செய்ததற்கான வரலாறு உள்ளது.
ஒண்டிவீரன் என்ற பெயரிலேயே வீரன் என்ற அடைமொழி இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஆங்கிலேய கோட்டைக்குள் ஒண்டியாக சென்றதால் தான் ஒண்டி வீரன் என்ற பெயர் வந்தது. சிந்து பாடல்கள் என்னும் தொகுப்பில் பூலித்தேவன் குறித்த வாரிசுகளே அதற்கு சான்றாகும். எனவே, இப்பகுதி மக்கள் பிரச்சனையில் ஈடுபடாமல் தங்களது குழந்தைகளை படிக்க வைத்து மேதைகளாக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications