கோடை விடுமுறை: குவியும் சுற்றுலா பயணிகளால் திணறும் ஊட்டி
ஊட்டி: கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து சில நாட்களேனும் தப்பிக்கவும், கோடை விடுமுறையை அனுபவிக்கவும் ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை மற்றும் மே தின விடுமுறையையொட்டி கடந்த இரு நாட்களில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 42 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்தனர். முக்கியமான சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கோத்தகிரி சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூட இடம் இல்லை. ஊட்டிக்கு வரும் லாரி போன்ற கனரக வாகனங்கள் லவ்டேல் சந்திப்பில் இருந்து மஞ்சகொரை வழியாக ஊட்டிக்கும், கூட்செட் சாலை வழியாக கூடலூருக்கும் திருப்பி விடப்படுகிறது.
என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சாலையில் இருமங்கிலும் அணிவகுத்து நிற்கும் வாகன நெரிசலை சமாளிக்க முடியவில்லை. இதற்கு வாகன ஓட்டிகள் சாலை விதிகளைக் கடைப்பிடிக்காததும் ஓர் காரணம். இடது ஓரமாக ஒன்றன் பின் ஒன்றாக மலையேறும் வாகனங்கள் சென்றால்தான் சிக்கலில்லாமல் செல்ல முடியும். ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் வலது பக்கம் ஏறிச்செல்வதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது என்று காவல்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
பயணத்தின் போதே விதிகளை காற்றில் பறக்கவிடும் பயணிகள் ஊட்டியில் தங்கி இருக்கும் காலத்தில் என்னென்ன சூழல் சீர்கேட்டினை உருவாக்குவோர்களோ என்பது சூழலியலாளர்களின் கவலையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு சீசனின் போதும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். இயற்கையை அனுபவிக்க வாருங்கள், சீரழிக்க வராதீர்கள் என்பதே இவர்களது கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications