ரூ.63 லட்சம் மதிப்பிலான பணிகளை முடிந்தது- வேடந்தாங்கல் சீசனுக்கு ரெடி
மதுராந்தகம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான முக்கிய பணிகள் செய்து முடித்து, சீசனை வரவேற்க சரணாலய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இங்கு சீசன் துவங்குகிறது. சீசனில் பல ஆயிரக்கணக்கான கி.மீ.,களை கடந்து வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகள், இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்பின் குஞ்சுகள் பறக்கும் தன்மையை பெற்றவுடன் அவை சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றன.
மொத்தம் 73 சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரியில் நிலவும் தட்பவெப்பநிலை வெளிநாட்டு பறவைகளுக்கு இனம்பெருக்கம் செய்ய தகுந்ததாக உள்ளன. சீசன் துவங்கும் முன், வெளிநாட்டு பறவைகள் வந்து கூடு கட்ட தேவையான தகவமைப்பை, சரணாலய அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.
பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, ஏரியில் பறவைகளின் இரைக்காக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. இந்தாண்டு 63 லட்சம் ரூபாய் மதிப்பில் சீசனை வரவேற்க தேவையான பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் சீசன் நாட்களில், பறவைகள் மற்றும் இயற்கை அமைப்பை கண்டு களிக்க வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உயர்ந்த தொலைநோக்கியுடன் பார்வையாளர் கோபுரம், ஏரிக்கரையில் நடந்த செல்லும் வகையில், கல்பதிக்கப்பட்டு, 40 இருக்கைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நவீன கழிப்பிட வசதி, குடிநீர் தொட்டி, பயணிகள் கருத்து விளக்க மையம் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக சுற்றுலா துறையின் சார்பில், பறவைகள் விளக்கப்படம், தொடுதிரையில் தொடப்படும் 30 பறவைகளின் ஒலியை கேட்கும் வசதி உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகளின் சரணாலயத்தை கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், சராணாலயத்தை பராமரித்து வரும் வனத்துறைக்கு பார்வையாளர்கள் மூலம் நல்ல வருவாயை கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications