தேவதைக்காக ஒரு காத்திருப்பு!
இப்படிச் சொல்கிறான் ஒரு காதலன்
நீ உன் உணர்வுகளுக்குள் உன்னை மறைக்கப் பார்க்கிறாய்
உண்மையை உள்ளுக்குள் போட்டு பூட்டி வைத்திருக்கிறாய்
ஆனால் நீ சொல்லவே தேவையில்லை கண்ணே
உன் கண்கள் அத்தனையயும் சொல்லி விடுமே!
நீ எப்போதும் சரியாகத்தான் பேசுவாய்
ஆனால் இப்போதெல்லாம் மிகச் சரியாக தவறாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய்!
உனக்கும் எனக்குமான தூரம்
ரொம்பப் பெரிதல்ல
நீ காக்கும் மெளனம்தான் கொன்று தீர்க்கிறது
உணர்வுகளுக்குப் போட்ட முக்காட்டை நீக்கு
உன் குரல் பம்மித் தணியும்போதே தெரியவில்லையா நீ பேசுவது பொய் என்று!
காதலியின் கண்ணாமூச்சி விளையாட்டு கூட காதலனுக்கு எவ்வளவு சுகமாகத் தெரிகிறது பாருங்கள்... அந்த அளவுக்கு பொறுமை காக்க அவனும் தயாராகி விட்டான்.. பின்னே, தேவதைகளைக் கோபித்துக் கொள்ள முடியுமா, முடியாதே...!
இன்னொருவன் இப்படிச் சொல்கிறான்...
எனது பொறுமைக்கு நிறைய பொறுமை உண்டு
என் முடிவு வரை காத்திருக்கவும் நான் தயார்
உன்னை நேசித்த உள்ளம் உண்மையானது
இந்த நேசிப்பும் உண்மையானது
உனக்கான இந்தக் காத்திருப்பும் உண்மையானது
உண்மையான நேசிப்பு என்றுமே வீண் போனதில்லை
எதைக் கொண்டும் மறைக்க முடியாத விஸ்வரூப கோபுரம் அது
காலம் போனாலும் காலத்தையும் தாண்டி கதகதப்பாய் அது வைத்திருக்கும் நம் உணர்வுகளை!
காத்திருப்பு பொதுவாக சங்கடமானதுதான், சஞ்சலத்தைக் கொடுக்கக் கூடியதுதான். ஆனால் காதலில் காத்திருப்புக்கும் ஒரு மதிப்புண்டு. காத்திருந்த காதல் என்றுமே வீண் போனதில்லை... மொத்தத்தில் காதல் சுகமானது.. அதுவும் தேவைதகளுக்காகக் காத்திருப்பது அருமையானது... எனவே காதலியுங்கள், காதலிக்கப்படுங்கள்!