துபாயில் நடந்த சென்னை கிரஸென்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிப்பண் பாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சென்னை கிரஸென்ட் உறைவிடப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் சென்னை கிரஸென்ட் உறைவிடப் பள்ளி எனது படிப்பின் காரணமாகவே உருவானதாக தனது தந்தை கூறியதை நினைவு கூர்ந்தார். முன்னாள் மாணவர்கள் பலரும் அமீரகத்தில் இணைந்திருப்பது மகிழ்வளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
அல்ஹாஜ். அஹ்மது நாஸிர் தைக்கா சுஐப் வரவேற்புரை நிகழ்த்தினார். துணை தலைவர் எஸ்.எம். புகாரி மற்றும் சதக் ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சிறப்புரை நிகழ்த்திய சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளார் வி.என்.ஏ. ஜலால் அமீரகத்தில் கிரஸென்ட் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாய் இருந்து வரும் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். தனது வாழ்நாளில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை நிறுவி சாதனை படைத்தவர் அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் என்று தெரிவித்தார்.
பள்ளி இயக்குநர் தாவுத்ஷா, சீனியர் முதல்வர் எஸ். யூசுஃப், முதல்வர் ஆப்ரஹாம் ஜான், சீனியர் முதல்வர் எஸ். யூசுஃப், மசூத் மௌலானா, புஸ்ரா டீச்சர், பாகவி ஹஜ்ரத், ஆசிரியர்கள் யேசுதாஸ், முத்து முஹம்மது, மன்சூர், முன்னாள் துணை முதல்வர் அப்துல் ரவூஃப் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். இறுதியாக இணைச் செயலாளர் அபுபக்கர் நன்றியுரை நிகழ்த்தினார்.
அபுபக்கர், முஹம்மது அர்ஷத், அமீன் முஹ்சின் மற்றும் அமீரக வாழ் முன்னாள் மாணவர் சங்கத்தினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியை அமீன் முஹ்சின் தொகுத்து வழங்கினார்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களது நண்பர்களை பார்த்த மகிழ்வில் அனைவரும் விடைபெற்றனர்.













Click it and Unblock the Notifications