ஷார்ஜாவில் தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவர் பா.இராமலிங்கத்திற்கு பிரிவு உபசார விழா
ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தில் கால் நூற்றாண்டிற்கும் அதிகமாக பணியாற்றி ஓய்வு பெற்ற கவிஞர் பா.இராமலிங்கத்திற்கு, கடந்த 1ம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற்றது. கீர்த்தி உணவகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, ஷார்ஜா சபையர் உணவக உரிமையாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். மதுக்கூர் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி, அமீரக காயிதேமில்லத் பேரவை பொது செயலாளர் ஏ.முஹம்மது தாஹா, வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் எல்.கோவிந்தராஜ், அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் பொருளாளர் அப்துல் லத்தீப், அஷ்ரஃப் அலி, திருவிடச்சேரி எஸ்.எம்.பாரூக், தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரெ.பட்டணம் மணி, நகரத்தார் சங்கத்தின் வள்ளியப்பன், போட்டோகிராபர் மதுக்கூர் நூருல் அமீன், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொது செயலாளர் முதுவை ஹிதாயத், சீமான் தலைவர் மாலிக் மற்றும் தமிழகப் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர்.
வாழ்த்துரையில் கவிஞர் இராமலிங்கம் ஆற்றிய தமிழ் சேவைகளை பலரும் நினைவு கூர்ந்தனர். மேலும் தனது பணியிடத்தில் அரபியர், பாகிஸ்தானியர் உள்ளிட்ட பல்வேறு நாட்டவரும், இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலத்தவரும் வணக்கம், வாழ்க என்று கூறும் வகையில் பணிபுரிந்து வந்ததை குறிப்பிட்டனர்.
மேலும் ஷார்ஜா பகுதியில் தமிழர்கள் இன்னல்களுக்கு உள்ளாகும் போது இராமலிங்கம் தலைமையிலான ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தினரின் தன்னலமற்ற பணியை பலரும் நினைவு கூர்ந்தனர்.
விழாவில் ஏற்புரை வழங்கிய இராமலிங்கம் கூறியதாவது,
வந்தோம், பணி புரிந்தோம், பொருளீட்டினோம், உதவுவோம் எனும் அடிப்படையில் என்னால் முடிந்த அளவிற்கு பணிபுரிந்தேன். இந்த பணிகள் தனிப்பட்ட ஒரு இராமலிங்கத்தின் பணியல்ல. நாம் அனைவரது கூட்டு முயற்சியே ஆகும். 25 ஆண்டுகளுக்கு முன்பு அமீரகம் வந்த போது ஏதாவது ஒரு தமிழனை பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்தில் உதித்தது தான் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம். எங்கு சென்றாலும் தமிழ்ப்பணி தொடர வேண்டும் என்பதே என்பது விருப்பம் என்றார்.
விழாவை அரசன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் முனைவர் மூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார். விழாவில் அமீரகத்தின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.