என் செய்வேன் கண்ணே...?

நான் மாற நீதான் காரணம்
என் இதயம் தவித்தபோது இதமாக கரம் நீட்டியவள் நீதான்
நீயே என் உலகம் என நான் நினைக்க நீதான் காரணம்
நான் பலவீனமானபோது
உன் நினைவால் என்னைத் தாங்கி பலம் கொடுத்தவள் நீதான்.
என்னை நம்பியதை விட
உன்னைத்தானே அதிகம் நம்பினேன்
என்னைப் பற்றி கண்ட கனவை விட
உன்னைப் பற்றிய கனவுகளே அதிகம் கண்ணே
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
உன் முகத்தில்தானே நான் விழிக்கிறேன்
நன்றி தேவதையே...
தனது காதலி, தனக்கு எப்படியெல்லாம் சந்தோஷம், ஏற்றம், உற்சாகம் கொடுத்தாள் என்பதை இதை விட ஒரு காதலனால் எப்படிச் சொல்ல முடியும்.
காதலில் எல்லாமே எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்க முடியாது. சிக்கல்கள், திருப்பங்கள், குழப்பங்கள், ஏமாற்றங்கள், வருத்தங்கள் என மாறி மாறி வரத்தான் செய்யும். காதலில் உண்மையாக இருந்தால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு வர முடியும். மீண்டு வரும் வழியைப் புரிந்து கொள்ள வேண்டியது மட்டுமே சம்பந்தப்பட்ட காதலர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்.
இப்படி ஒரு காதலன் எழுதுகிறான்...
உன் காதலுக்கு நன்றி பெண்ணே
என் இதயத்தை சில்லிட வைத்தவள் நீ
என் இதயத்துக்குள் சிக்கென அமர்ந்தவள் நீ
உன் நினைவுகளால் என்னை வருடியவள் நீ
உன் நினைவுகளால் என்னை சுகப்படுத்தியவள் நீ
ஒவ்வொரு நாளும்
என் விடியல் உன் நினைவுகளில்தான்
என் இதயத்தை
ஒவ்வொரு நாளும் உன் நினைவுத் தாமரைதான் அலங்கரிக்கிறது
என் சந்தோஷம்
என் உற்சாகம்
என் மகிழ்ச்சி
எல்லாமே உன் பெயரை மட்டுமே சொல்கிறது
எந்த அளவுக்கு தனது காதலால் ஏற்றம் பெறறிருந்தால் இப்படிச் சொல்லியிருப்பான் இவன். இவன் மூச்சு விடும்போது கூட இவனது காதலியின் நினைவுகள்தான் வெளியே வரும். அந்த அளவுக்கு ஆழமான காதல் இது.
ஒவ்வொரு காதலிலும் அன்புதான் மேலோங்கியிருக்கும், அக்கறைதான் கூடிப் போயிருக்கும். காமத்திற்கு இங்கு இரண்டாம் பட்சம்தான். அவள் எப்படி இருக்கிறாளோ, சாப்பிட்டாளோ, உடம்பைக் கவனித்தாளோ, நாம் சொன்னதைக் கேட்டாளா இல்லை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டாளா என்றெல்லாம் ஒருவனுக்கு மனசு தவித்தால் அவன் படும் பாடு இருக்கே.. அதைச் சொல்லித் தெரிவிக்க முடியாது. அதுதாங்க உண்மையான காதல்...
இந்தப் பதற்றமும், தவிப்பும் எந்தக் கலப்படமும் இல்லாத, எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான காதலுக்கு மட்டுமே சாத்தியம்.. இப்படிப்பட்ட காதலர்களை நிறையப் பார்க்க முடியுமா என்பதை விட இப்படிப்பட்ட காதலர்கலும் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கியம்.
காதல் சுகமானதோ, சோகமானதோ அல்லது சிக்கலானதோ நீ இல்லாமல் என் செய்வேன் கண்ணே என்று ஒரு மனம் இறைஞ்சினாலே போதும், அந்தக் காதல் நிச்சயம் வலிமையானது என்பதில் சந்தேகமே இல்லை..!












Click it and Unblock the Notifications