மகாசிவராத்திரி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

லட்ச தீபம்
பஞ்ச பூத தலங்களில் அக்னித் தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு ஆலயத்தின் முகப்புப் பகுதியிலிருந்து, உள் பிரகாரம் வரை லட்சம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விடிய விடிய நான்கு காலமும் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர்.
ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை உணர்த்தும் வகையில் சிவன் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும் திருவண்ணமலையில், சிவராத்திரி பண்டிகையை கொண்டாடியது மகிழ்ச்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.மகாசிவராத்திரி விழாவில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர்.
நாட்டியாஞ்சலி விழா
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவராத்திரியை ஒட்டி நடைபெற்ற நான்கு கால சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் உலகப் புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் நடராஜர் கோவிலிலும், தஞ்சை பெரிய கோவிலிலும், திங்கட்கிழமை மங்கள இசையுடன் தொடங்கியுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு, இந்த இரு ஆலயங்களிலும் இரவு முழுவதும் நடைபெற்ற நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். சிதம்பரத்தில் வருகிற 24ம் தேதி வரையிலும், தஞ்சையில் வருகிற 26ம் தேதி வரையிலும் நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது.
சென்னையில் சிவராத்திரி
சிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சிவாலயங்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய ஏழு சிவ ஆலயங்களிலும் நடைபெற்ற நான்கு கால பூஜைகளில் விடிய விடிய பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு வண்ணமிகு மின்சார விளக்குகளால் சிவாலயங்கள் அலங்கரிக்கப்பட்டு, விடிய விடிய பக்தி பிரசங்கங்கள் நடைபெற்றன. இதேபோல் நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களிலும், சிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications