லண்டனில் உலகளாவிய தமிழ் இளையோர் அவை சந்திப்பு நிகழ்ச்சி
அந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
வரலாற்றில் தொன்று தொட்டு தமிழர்கள் வாழ்ந்து வரும் தமிழீழப் பகுதியான இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கினை தமிழர்கள் பூர்வீக தாயகமாகக் கொண்டுள்ளனர். தீவின் ஏனைய பகுதிகளில் இருந்து வேறுபட்டு, இப்பகுதித் தமிழர்கள் தனித்துவமான மொழி, கலை, வரலாறு மற்றும் பண்பாட்டு விஷயங்களை கொண்டவர்கள்.
அங்கு கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்தத்தை முதன்மை குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் சிறிலங்கா அரசு தமிழர்களின் பொருளாதாரம், கலை, பண்பாடு, இனவிகிதாசாரம், தாயகப் பிரதேச உரிமம் ஆகிய தமிழர்களின் அடையாளங்களை அழித்து வருகின்றது.
அப்பகுதியில் தமிழர்கள் வரலாற்று ரீதியாக மொழியுரிமை, கல்வி, மற்றும் குடியுரிமை மறுக்கப்பட்டு அரச இயந்திரத்தினூடாக திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். அங்கு திட்டமிட்ட வகையில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மூலமாகவும் அதன் சட்டங்களினூடாகவும் தமிழர்கள் என்ற காரணத்தினால் இன அழிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர்.
தமிழினம் 1976ல் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலுள்ள கோட்பாடுகளுக்கு அமைவாக தனக்கு இறைமையுள்ள தமிழீழம் வேண்டும் என 1977ல் வாக்களித்து, அதனை மீண்டும் 2009இலும், 2010இலும் உறுதிபடுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசு 2009ம் ஆண்டின் இறுதிப் போரின்போது தன்னால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிய குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறும் நிலையையோ, நீதி வழங்கும் செயற்பாட்டையோ தனது உள்ளகக் கட்டுமானங்களினூடாக செயற்படுத்த முடியாது உள்ளது.
எனவே, தமிழ் இளையோர்களை சரியான பாதையில் முன்னேற்றி செல்வதற்கு ஈழத்தமிழர்களுடைய அடையாளங்களை பேணி பாதுகாப்பதும் எமது வரலாற்றை நினைவுகொள்வதுவும் இன்றியமையாதவை. உண்மையை நிலைநாட்டி, பொறுப்பு கூறும் வகையில் நீதி வழங்குவதற்கு சுதந்திரமான சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என உலகளாவிய தமிழ் இளையோர் அவை வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காத வகையில்- குறிப்பாக தமிழர் தாயகம், தமிழர்களுக்கான தன்னாட்சி, தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பவற்றின் அடிப்படையில் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு தீர்வுகாண உலகளாவிய தமிழ் இளையோர் அவை உழைக்கும்.
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட இன அழிப்பினை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய தமிழ் இளையோர் அவை தொடர்ந்து பாடுபடும்.
தமிழ் தேசிய அடையாளத்தினை ஆதரித்து அதனைப் பாதுகாத்தல், எமது வரலாறு, மாவீரர் ஈகம் ஆகியவற்றை போற்றி அவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தமிழீழ தேசிய கொடி, தமிழீழத்தின் தேசிய சின்னங்கள், எமது சமூக, அரசியல், கலாச்சார சின்னங்கள், எமது வரலாற்று-பண்பாட்டு விஷயங்களுடன் தொடர்புடைய தேசிய விழாக்கள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக உலகளாவிய தமிழ் இளையோர் அவை செயற்படும்.













Click it and Unblock the Notifications